Feb 24, 2026 - 08:28 PM -
0
இந்திய மத்திய அரசு, கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கு இன்று (24) ஒப்புதல் அளித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் திகதி கேரள மாநில சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஏப்ரல் - மே மாதங்களில் கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்னர், இந்திய அரசியலமைப்பின் 3 ஆவது பிரிவின் கீழ், இந்தியக் குடியரசுத் தலைவரால் "கேரளா (பெயர் மாற்ற) சட்டமூலம்- 2026" கேரள மாநில சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்கப்படும்.
அங்கு மாநில சட்டப்பேரவையின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், குடியரசுத் தலைவரின் பரிந்துரையின் பேரில் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மலையாள மொழியில் இந்த மாநிலம் 'கேரளம்' என்றே அழைக்கப்படுவதாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மலையாளம் பேசும் மக்களுக்காக 'கேரளம்' என்ற பெயரில் ஒருங்கிணைந்த மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திருத்தத்தின் மூலம், இந்திய அரசியலமைப்பின் 8 ஆவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் இனிமேல் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

