Feb 25, 2026 - 09:40 AM -
0
உயிரிழந்த கொடையாளி ஒருவரிடமிருந்து பெறப்பட்டு பொருத்தப்பட்ட கருப்பையின் மூலம் பிரிட்டனில் முதல் குழந்தை பிறந்துள்ளது.
'ஹியூகோ பவல்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆண் குழந்தை, கடந்த டிசம்பர் மாதம் லண்டனில் உள்ள 'குயின் சார்லட் மற்றும் செல்சி' வைத்தியசாலையில் சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் பிறந்துள்ளது. பிறப்பின் போது குழந்தையின் எடை 3.1 கிலோகிராம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தையின் தாயான 30 வயதுடைய கிரேஸ் பெல் (Grace Bell), பிறப்பிலேயே கருப்பை அற்ற Mayer-Rokitansky-Kuster-Hauser என்ற அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டவராவார்.
தனது பதின்ம வயதிலேயே தன்னால் ஒருபோதும் தாயாக முடியாது என்பதை அறிந்துகொண்டதாகவும், அன்றைய தினம் வைத்தியசாலையின் கழிப்பறைக்குள் சென்று கதறி அழுததாகவும் அவர் மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தனது இந்தச் சவாலான பயணம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், "இது ஒரு அற்புதம். இது சாத்தியமாகும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. எனது வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான நாள் இன்றுதான்" எனக் கூறினார்.
இந்தக் குழந்தை பிறப்பிற்கான கருப்பையை உயிரிழந்த இளம் பெண் ஒருவரே தானமாக வழங்கியுள்ளார். அவரது கருப்பைக்கு மேலதிகமாக மேலும் 5 உறுப்புகள் நான்கு பேருக்குப் பொருத்தப்பட்டு அவர்களின் உயிரைக் காப்பாற்றப் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனக்குத் தாய்மைப் பேற்றை வழங்குவதற்குக் காரணமாக இருந்த முகம் தெரியாத அந்தக் கொடையாளியையும் அவரது குடும்பத்தினரையும் கிரேஸ் பெல் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
"அவரது பெற்றோர் தமது மகளை இழந்த வேதனையில் இருந்தாலும், அவர் செய்த இந்த உன்னத தியாகத்தால், எனது வாழ்நாள் கனவை என்னால் நனவாக்கிக்கொள்ள முடிந்தது," என அவர் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் உயிரிழந்த கொடையாளி ஒருவரிடமிருந்து பெறப்பட்ட கருப்பையின் மூலம் குழந்தை பிறந்துள்ள மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
பிரிட்டனில் இதற்கு முன்னர் உயிருடன் இருக்கும் கொடையாளியிடம் (சகோதரியிடம்) பெறப்பட்ட கருப்பை மூலம் குழந்தை பிறந்திருந்த போதிலும், உயிரிழந்த ஒருவரிடமிருந்து பெறப்பட்ட கருப்பையின் மூலம் குழந்தை பிறந்துள்ளமை இதுவே முதல் முறையாகும்.
ஆரம்பத்தில் குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக 'வாடகைத் தாய்' முறையை நாட எண்ணியிருந்த கிரேஸ் பெல், பின்னர் பிரிட்டனின் கருப்பை மாற்று சத்திரசிகிச்சைத் திட்டத்தில் இணைந்து இந்த உன்னத தாய்மைப் பேற்றைப் பெற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டசாலியாகியுள்ளார்.

