Feb 25, 2026 - 11:49 AM -
0
அம்பாறை, நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் பகுதியில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பு காரணமாக, அப்பகுதி கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அட்டப்பள்ளம் மக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீண்ட கால வரலாற்றையும் பாரம்பரியங்களையும் கொண்ட நிந்தவூர் பிரதேசத்தின் இந்தத் தமிழ்க் கிராமத்தில், கடந்த இரண்டு மாதங்களாகக் கடலரிப்பு மிகக் கடுமையாக உள்ளது. சுமார் 500 மீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பை கடல் ஏற்கனவே உள்வாங்கியுள்ளதுடன், 20 இற்கும் மேற்பட்டவர்களின் தனியார் காணிகள் கடலுக்குள் காவு கொள்ளப்பட்டுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்திற்காகத் தென்னை பயிர்ச்செய்கையையே பெரிதும் நம்பியுள்ளனர். எனினும், கடல் நீர் ஊடுருவல் காரணமாக நாளாந்தம் ஏராளமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து கடலில் மூழ்கி வருகின்றன. இது அப்பகுதி மக்களின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது.
ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டுவந்தபோதிலும் அது பாரியளவிலான கடலரிப்பாக இல்லாத நிலையிலும் அண்மைக்காலமாகவே கடலரிப்பானது பாரியளவில் இடம்பெற்றுவருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரு மாதங்களாக பாரியளவில் கடலரிப்பு இடம்பெற்றுவருவதாகவும் சுமார் 500 மீற்றருக்கும் அதிகமான பகுதிகள் கடல் உள்வாங்கியுள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டவர்களின் காணிகள் கடலுக்குள் சென்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கரையோரப்பகுதிகளிலும் வாழும் மக்கள் தினமும் உயிரை கையில் பிடித்தே வாழும் நிலைமை காணப்படுவதாகவும் இரவில் தூங்கும்போது கடல் கொண்டுசென்றுவிடுமோ என்ற அச்சத்துடனேயே தினமும் தூங்கும்போது அச்சத்துடன் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ஏ.எல்.அப்துல் லத்தீப் அவர்களுடன் தொடர்புகொண்டு கேட்டபோது,
குறித்த பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டதுடன் இது தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.அத்துடன் குறித்த பகுதிகளில் ஆறு இடங்களில் கடலரிப்பனை தடுப்பதற்கான அணைகள் அமைப்பதற்கான திட்டமுன்மொழிவுகளும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நேற்று (24) தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அப்பகுதிக்கு விஜயம் செய்து குறித்த பகுதிகளில் கடலரிப்பினை தடுப்பதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
--

