Feb 25, 2026 - 02:31 PM -
0
தலவாக்கலை பிரதான நகரில் கடந்த 24 ஆம் திகதி நகைக்கடை ஒன்றில் நூதனமான முறையில் தங்க மோதிரம் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நகை வாங்குவது போல் கடைக்குள் நுழைந்த நபர், நகைகளைப் பார்ப்பது போல நடித்துக் கடையுரிமையாளரின் கவனத்தைத் திசை திருப்பியுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில், தான் மறைத்து வைத்திருந்த போலி தங்க மோதிரத்தை காட்சிப் பெட்டியில் வைத்துவிட்டு, அங்கிருந்த உண்மையான தங்க மோதிரத்தைத் திருடியுள்ளார்.
பின்னர், நீண்ட நேரம் நகைகளைப் பார்த்த அவர், அன்று எதனையும் வாங்காமல் 'மறுமுறை வருவதாகக்' கூறிவிட்டுச் சென்றுள்ளார். அவர் சென்ற பிறகு ஊழியர்கள் நகைகளைச் சரிபார்த்தபோது, 50,000 ரூபாய் பெறுமதியுடைய தங்க மோதிரம் திருடப்பட்டிருப்பதும், அதற்குப் பதிலாகப் போலி மோதிரம் வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
கடையிலுள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்தபோது, அந்த நபர் மிக நூதனமான முறையில் மோதிரத்தை மாற்றும் காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்துக் கடை நிர்வாகம் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
அந்த புகாரின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சந்தேகநபரின் CCTV புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. குறித்த நபர் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், உடனடியாகத் தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
--

