மலையகம்
ஹட்டன் குடாகம வனப்பகுதியில் விஷமிகளால் தீ வைப்பு

Feb 26, 2026 - 10:11 AM -

0

ஹட்டன் குடாகம வனப்பகுதியில் விஷமிகளால் தீ வைப்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம புகையிரத பாதைக்கு அருகாமையிலுள்ள வன பாதுகாப்புப் பகுதிக்கு, நேற்று (25) மாலை இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. 

இத்தீப்பரவல் காரணமாக பல ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

இந்தத் தீ விபத்தின் காரணமாக இலங்கைக்குக்கே உரித்தான அரிய வகை தாவரங்கள், மூலிகைச் செடிகள் மற்றும் சிறிய வகை உயிரினங்கள் அழிந்து போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

மேலும், வறட்சிக் காலங்களில் காடுகளுக்குத் தீ வைக்கப்படுவதால் நீரூற்றுகள் வற்றிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

காடுகள் அழிவதனால் சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் உணவு தேடி மனிதர்கள் வாழும் குடியிருப்புகளை நோக்கி வரக்கூடும் எனப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். 

விலங்குகளை வேட்டையாடுவதற்காக அல்லது பொழுதுபோக்குக்காகச் சமூக விரோதிகள் இவ்வாறான தீ வைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் எனப் பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

இயற்கையை அழிக்கும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலிருந்து பலத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05