Feb 27, 2026 - 11:30 AM -
0
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, முனைக்காடு குடியிருப்புப் பகுதிக்குள் இன்று (27) அதிகாலை புகுந்த காட்டு யானை நடத்திய தாக்குதலில் 74 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். முனைக்காடு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி சிவபாக்கியம் (74) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், 44, 62 வயதுடைய இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவிய காட்டு யானை, அங்கிருந்த வீடொன்றையும் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது. யானையின் அட்டகாசம் காரணமாக முனைக்காடு பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். தற்போது வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து, குடியிருப்புப் பகுதிக்குள் நிலைகொண்டுள்ள யானையை வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக நகர் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 13 ஆம் திகதி வாழைச்சேனை நகருக்குள் புகுந்த யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்ததுடன் நால்வர் படுகாயமடைந்தனர்.
பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் இன்று வரை மாவட்டத்தில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
--

