Feb 28, 2026 - 07:16 AM -
0
ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த அண்மைக்காலப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அந்த நாட்டின் மீது தான் அதிருப்தியில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது குறித்து தான் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
"எங்களுக்குத் தேவையானதை வழங்க அவர்கள் தயாராக இல்லை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே, நான் இதில் மகிழ்ச்சியடையவில்லை," என்று உடன்படிக்கை இன்றி வியாழக்கிழமை முடிவடைந்த ஜெனிவா பேச்சுவார்த்தைகள் குறித்து தனது முதல் கருத்தைப் பதிவிடும்போது டிரம்ப் குறிப்பிட்டார்.
ஈரானுக்கு எதிராக இராணுவ பலத்தைப் பயன்படுத்த தான் விரும்பவில்லை என்று வலியுறுத்திய அமெரிக்க ஜனாதிபதி, ஆனால் சில நேரங்களில் "அவ்வாறு செய்ய வேண்டியிருக்கும்" என்றும் கூறினார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், பல நாடுகள் ஈரானில் உள்ள தமது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தன.
பிரித்தானியா, தெஹ்ரானில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை தற்காலிகமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டதுடன், இஸ்ரேலுக்கான பயண வழிகாட்டலையும் புதுப்பித்து "மிகவும் அத்தியாவசியமான பயணங்களைத் தவிர" ஏனைய பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
மோதல்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தினால் சீனா, இந்தியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் ஈரானில் உள்ள தமது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளன.
ஜெர்மனி இஸ்ரேலுக்கான பயணத்தை "அவசரமாகத்" தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள அதேவேளை, பிரான்ஸ் தனது முன்னைய பயணத் தடையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா, ஈரானில் உள்ள தனது குடிமக்களை "உடனடியாக" வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகம், அவசரமற்ற பணிகளில் உள்ள சில ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அந்நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும், "வணிக ரீதியான விமானங்கள் சேவையில் இருக்கும்போதே" அவர்கள் அவ்வாறு வெளியேறுவது நல்லது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

