Feb 28, 2026 - 04:38 PM -
0
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் பல நகரங்களில் இன்று தொடர்ச்சியான வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.
தெஹ்ரானிலுள்ள ஈரானின் உயர்மட்டத் தலைவர் மற்றும் ஜனாதிபதி அலுவலகங்கள் ஆகியவையும் இந்தத் தாக்குதல்களின் இலக்குகளாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கெர்மன்ஷா, கும், இஸ்ஃபஹான், தப்ரிஸ், கராஜ் ஆகிய நகரங்களிலுள்ள இராணுவத் தளங்கள் மற்றும் நாட்டின் தெற்கே கெனாரக்கில் உள்ள ஈரானிய கடற்படைத் தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
குர்திஷ் பிராந்தியத்தில் உள்ள கம்யாரன் என்ற சிறிய நகரத்திலுள்ள ஈரானிய புரட்சிகர இராணுவத்தின் (IRGC) தளம் ஒன்று குண்டுவீசித் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதல்கள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, இராணுவத் தளங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களை அவ்விடங்களிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய பாதுகாப்புப் படை எச்சரித்திருந்தது.
இதேவேளை, தெஹ்ரானின் நர்மக் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநிஜாத் வசிக்கும் இல்லம் ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதை அங்கிருந்து கிடைக்கும் புகைப்படங்கள் காட்டுகின்றன.
எனினும், முன்னாள் ஜனாதிபதி இதில் காயமடைந்துள்ளாரா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
நாட்டில் அமைதியைப் பேண பாதுகாப்புப் படையினர் தயாராக இருப்பதாகவும், நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகள் அவசரத் தேவைகளுக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஈரானிய உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

