கிழக்கு
சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

Mar 2, 2026 - 09:51 AM -

0

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

இந்த அரசாங்கத்தினால் சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஒரு விசாரணையை நடத்தினால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விடயமாக இருக்கட்டும், பொறுப்பு கூறல் விடயமாக இருக்கட்டும் நிரந்தரமான ஒரு தீர்வை அரசு வழங்கக் கூடியதாக இருக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். 

மொட்டு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டுக் கட்சியாக அல்லது கூட்டணியாக இலங்கை தமிழரசு கட்சி செல்லும் என்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார். 

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திற்குட்பட்ட ரமேஷ்புரம், கணபதி நகர், ஐயன்கேணி ஆகிய அறநெறி பாடசாலைகளில் கல்வி கற்கும் 6 ஆம் தரத்திற்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (01) நடைபெற்றது. 

ரமேஷ்புரம் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான செல்வகுமார் நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 

இந்த நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று நகரசபை உறுப்பினர் ரகு உட்பட ஆலய நிர்வாக சபையினர், கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் சங்க, மற்றும் பொதுமக்கள், பொது அமைப்புக்கள் என பலர் கலந்துகொண்டனர். 

இதன்போது மேலும் கருத்துதெரிவித்த அவர், 

உத்தியோகபூர்வமாக அவர்களுடன் சேர கூறி எங்களுடைய கட்சியிடம் பேசியதாக நான் அறியவில்லை. அவ்வாறான ஒரு அழைப்புகள் வந்தால் அது கட்சியினுடைய உயர்மட்ட குழுக்கள் மத்திய செயற்குழுக்கள் தான் அந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். இருந்த போதும் என்னுடைய அறிவுக்கு எட்டிய வகையில் மொட்டு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டுக் கட்சியாக அல்லது கூட்டணியாக இலங்கை தமிழரசு கட்சி செல்லும் என்பதற்கு எந்த வாய்ப்பு இருக்கும் என நான் நம்பவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து ஆனால் இது தொடர்பாக கட்சியினுடைய உயர்மட்டம்தான் முடிவு எடுக்க வேண்டும். 

அரசாங்கத்தை பொருத்தவரையில் இந்த சுரேஷ் சலேனுடைய கைது சம்பந்தமாக உண்மையில் நான் 2023 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பல விடயங்களை நாங்கள் வெளிப்படுத்தி இருந்தோம். சர்வதேச விசாரணை வந்தால் தான் எங்களுடைய சாட்சியங்களை சர்வதேச விசாரணை இடம்பெற்றால் ஒப்படைக்கலாம் என்று இன்றும் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட இன்றும் சாட்சிகள் வழங்குவதற்கு பலர் இருக்கின்றார்கள். 

சுரேஷ் சலே கைதுக்கு பின்னர் இலங்கை வரலாற்றில் நடக்காதவாறு நடந்திருக்கின்றது. அரசாங்கத்தில் இந்த நல்ல விடயங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம், நல்ல விடயங்களை நாங்கள் மறுப்பது அல்ல அந்த வகையில் சுரேஷ் சலே போன்று உயர்மட்ட ராணுவ புலனாய்வுத்துறை ராணுவ அதிகாரிகளை கைது செய்வது இந்த அரசாங்கம் செய்துள்ள பெரியதொரு விடயம். 

ஆனால் இன்னமும் பலர் இருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் நினைக்கின்றேன் 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை அதோடு அதனை தொடர்ந்து ராணுவ புலனாய்வுத்துறை செய்த பல விடயங்கள் தொடர்பாக பலர் கருத்துக்கள் முன் வைத்திருக்கின்றார்கள். நாங்களும் பாராளுமன்றத்தில் இந்த விடயங்களையும் கூறி இருக்கின்றோம். 

இந்த விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேச மேற்பார்வையுடன் ஒரு விசாரணையை இந்த அரசாங்கம் செய்யுமாக இருந்தால் அரசுக்கு ஒரு நிரந்தரமான வெற்றி கிடைக்கும், அது ஒரு புறம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விடயமாக இருக்கட்டும், பொறுப்பு கூறல் விடயமாக இருக்கட்டும் நிரந்தரமான ஒரு தீர்வை அரசு வழங்கக் கூடியதாக இருக்கும் சர்வதேச அங்கீகாரத்துடன் ஒரு விசாரணையை நடத்தினால். 

அந்த வகையில் இவ்வாறான ஒரு பின்னணியில் நான் ஏன் கூறுகின்றேன் என்றால் மொட்டு கட்சியை சேர்ந்தவர்கள் சுரேஷ் சலே இராணுவ வீரர் தமிழ் மக்களை அழித்ததில் அவருக்கும் பங்கு இருக்கின்றது என்கின்ற போது தமிழரசு கட்சி இவ்வாறான ஒரு கூட்டணியில் சேருமா என்ற கேள்வி கேட்பது பிழை என்பதை சொல்லுவதற்காகதான் கூறுகின்றேன் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05