Mar 5, 2026 - 06:18 AM -
0
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை - ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக இலங்கை கடல் எல்லைக்குள் விட்டுச் சென்ற காணொளி வெளியாகியுள்ள போதிலும், இலங்கை கடற்படையினரால் அவர்கள் இதுவரை மீட்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஊரணிப் பகுதியிலிருந்து சிறிய படகில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள், இயந்திரக் கோளாறு அல்லது சீரற்ற காலநிலை காரணமாக திசைமாறி நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். பல நாட்களாக நடுக்கடலில் தவித்த இந்த மீனவர்களை, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் அவதானித்துள்ளனர்.
உடனடியாகச் செயற்பட்ட இந்திய மீனவர்கள், நடுக்கடலில் தவித்த ஈழத்து மீனவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கி மனிதாபிமானத்துடன் உதவியுள்ளனர். அத்துடன், அவர்களின் படகினைப் பாதுகாப்பாக இழுத்து வந்து இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள் விட்டுச் சென்றுள்ளனர். இந்த முழுமையான நிகழ்வையும் இந்திய மீனவர்கள் காணொளியாகப் பதிவு செய்து உறவினர்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளனர்.
இந்திய மீனவர்களால் உணவு வழங்கி எல்லைக்குள் விடப்பட்ட காணொளி ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையிலும், சம்பவம் நடைபெற்று ஆறு நாட்கள் கடந்தும் இலங்கை கடற்படையினரால் குறித்த இரண்டு மீனவர்களையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை எனவும், கிடைக்கப்பெற்றுள்ள காணொளி ஆதாரத்தின் அடிப்படையிலாவது கடற்படையினர் தமது தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தி, காணாமல் போன மீனவர்களை விரைவாக மீட்டுத் தர வேண்டும் எனவும் மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
--