Mar 6, 2026 - 12:46 AM -
0
பிரித்தானியாவின் 'ஹெச்.எம்.எஸ் டிராகன்' (HMS Dragon) போர்க்கப்பல் சைப்ரஸிற்கு அனுப்பப்படுவதாகவும், அது அடுத்த சில வாரங்களுக்குள் அங்கு சென்றடையும் என்றும் அந்த நாட்டு பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார்.
மற்ற நாடுகளை விட சைப்ரஸில் பிரித்தானியாவின் அதிக போர் விமானங்கள் உள்ளன. அத்துடன், வழக்கமாக இருப்பதை விட கூடுதலாக 400 வான் பாதுகாப்பு நிபுணர்கள் அங்கு பணியில் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் நோக்கம் குறித்து அவர் கூறுகையில், பிரித்தானிய பணியாளர்கள், எங்களது படைத்தளங்கள், சைப்ரஸ் தீவு மற்றும் இப்பிராந்தியத்தில் உள்ள எங்களது பங்காளிகளை பாதுகாப்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம் என்றார்.
ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பிரித்தானியா இணையுமா என்ற கேள்விக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
போர் மற்றும் மோதல்களின் தன்மை எப்போதும் மாறக்கூடியது. ஈரானியர்கள் என்ன செய்வார்கள் என்று எங்களுக்குத் தெரியாது, என்று கூறிய அவர், மக்கள் மற்றும் படைகளின் பாதுகாப்பிற்காக பிரித்தானியா தனது நடவடிக்கைகளை மாற்றியமைக்கும் எனத் தெரிவித்தார்.
சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் படைத்தளத்திற்கு அவர் சென்றிருந்தபோது, அங்கே அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதை அவர் உறுதி செய்தார். பிரதமருடனான 'கோப்ரா' அவசரக் கூட்டத்திற்காக அவர் தயாராகிக்கொண்டிருந்தபோது இந்த எச்சரிக்கை ஒலி கேட்டதாக அவர் தெரிவித்தார்.