Mar 6, 2026 - 11:01 PM -
0
மத்திய கிழக்கு யுத்தத்தை நிறுத்துமாறு அமெரிக்காவை வலியுறுத்தியும், ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (06) கொழும்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தப் போராட்டங்களில் இலங்கைக்கான ஈரான் தூதுவர் மற்றும் இந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.
கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு அருகில் இன்று நண்பகல் இந்தப் போராட்டம் நடைபெற்றது. முஸ்லிம் சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்தில், இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh), ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாகவும் இன்று காலை அமைதியான முறையிலான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தினால் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன், ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மத்திய கிழக்கு யுத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியும் இலங்கைக்கான ஈரான் தூதரகத்திற்கு முன்பாகவும் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஐக்கிய சோசலிச முன்னணி, சமசமாஜக் கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகியன இணைந்து இதனை முன்னெடுத்திருந்தன.