Mar 7, 2026 - 07:08 AM -
0
மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பணிக்குழாமையும், இலங்கையின் பொறுப்பில் உள்ள இரண்டாவது ஈரானிய கப்பலில் உள்ள பணிக்குழாமையும் மீண்டும் ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ரொயிட்டர்ஸ் (Reuters) செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி அந்தச் சேவை இதனைத் தெரிவித்துள்ளது.
பொறுப்பேற்கப்பட்டுள்ள பணிக்குழாமை ஈரானின் பரப்புரை நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கும், அத்தகைய முயற்சிகளைக் குறைப்பதற்கும் அமெரிக்கா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த புதன்கிழமை (04) காலிக்கு அப்பால் 19 கடல் மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் வைத்து IRIS Dena எனும் ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலொன்றினால் மூழ்கடிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் ஏராளமான பணிக்குழாமினர் உயிரிழந்ததுடன், உயிர் தப்பிய 32 பேர் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் கரைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
அதன் பின்னர் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.