Mar 7, 2026 - 08:29 AM -
0
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மேலும் இரு சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று (06) கைது செய்துள்ளனர்.
குறித்த குற்றச் செயலின் பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை பேருந்து மூலம் மொனராகலை பகுதிக்கு அழைத்துச் சென்றமை மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 39 மற்றும் 53 வயதுடைய இப்பாகமுவ மற்றும் மாகொல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரினால் வழங்கப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பேருந்து ஒன்றின் மூலமே சந்தேக நபர் ஒருவரால் துப்பாக்கிதாரி அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பேருந்தையும் விசாரணை அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற இந்தப் படுகொலைகள் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
அதன்படி, மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் ஹோமாகம வலய குற்ற விசாரணைப் பிரிவினரால், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் உட்பட இக்குற்றத்துடன் தொடர்புடைய 08 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.