Mar 8, 2026 - 10:07 PM -
0
விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக நியமிக்கப்படும் ஈரானின் அடுத்த அதி உயர் தலைவர், முதலில் தமது ஒப்புதலைப் பெறத் தவறினால் அவர் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏபிசி (ABC) செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் புதிய அதி உயர் தலைவர் எங்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறிய டிரம்ப், அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு அந்தப் பதவிக்கு வருபவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் அதிக காலம் நீடிக்க மாட்டார்கள் என்றும் எச்சரித்தார்.
என்னை போன்ற ஒரு ஜனாதிபதி இல்லாத சூழலில், ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் நாம் மீண்டும் அங்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்.
கொல்லப்பட்ட ஈரானின் அதி உயர் தலைவர் அலி கமேனியின் வாரிசைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைக் கொண்ட ஈரானிய மதகுருமார்கள் சபை, இதற்கான வாக்கெடுப்பை நடத்தியுள்ளதாகவும் விரைவில் ஒருவரது பெயரை அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே டிரம்பின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
