Mar 9, 2026 - 06:16 AM -
0
ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள் சபை தெரிவு செய்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் போது கடந்த 28 ஆம் திகதி ஈரானிய அதி உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இந்நிலையில் அங்கு இடைக்கால பொறுப்பை நிபுணர்கள் சபை ஏற்றது.
பின்னர் 80 பேர் கொண்ட நிபுணர்கள் சபை புதிய அதி உயர் தலைவரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில், நேற்று இந்த முடிவை இறுதி செய்துள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
56 வயதான மொஜ்தபா கமேனி, திரைமறைவில் பெரும் செல்வாக்கு செலுத்தும் நபர் ஒருவராகக் கருதப்பட்டார்.
பாசிஜ் துணை இராணுவப் படையை வழிநடத்தியது மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் இவ்வாறான யூகங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்த போதிலும், அவர் இதுவரை இஸ்லாமிய குடியரசில் எந்தவொரு அதிகாரப்பூர்வ பதவியையும் வகிக்கவில்லை.
கடந்த காலத்தில் மொஜ்தபா கமேனியின் பெயர் இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமது செல்வாக்கை வளர்த்தெடுத்த அவரது தந்தையைப் போன்ற ஒரு தலைவராக உருவெடுப்பதற்கு சில காலம் எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆட்சியின் உயர்மட்டப் பிரிவுகளுக்கு இடையே நிலவும் பல்வேறு பிளவுகளைச் சரிசெய்யும் ஒரு மத்தியஸ்தராகச் செயல்படுவதே இப்போது அவரது முக்கியப் பணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
