Mar 10, 2026 - 07:01 PM -
0
கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் கண்டாவளை பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், அரசாங்கத்தின் 'வளமான கிராமம்' திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட காலநிலைக்கு அமைவான புதிய விவசாய பண்ணை திறந்து வைக்கப்பட்டது.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் “சமூகசக்தி” திட்டத்தின் கீழ், ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) வழங்கும் தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சுமார் 10 ஏக்கர் அளவிலான அரச காணியில் தெரிவு செய்யப்பட்ட 25 விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, கிராமிய அபிவிருத்தி அமைச்சு 75,639,512.50 ரூபாவும், UNDP நிறுவனம் 14,518,686.52 ரூபா என நிதி செலவிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் மருங்கன் மோகன், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, குறித்த பண்ணையில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குத் தேவையான விவசாய உபகரணங்களும் அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
--
