Mar 12, 2026 - 12:57 PM -
0
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகரித்து வருவதால், பிராந்தியத்திலுள்ள முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வறட்சியான காலநிலையை அடுத்து காசல்ரி, மாவுசாக்கலை, கெனியன், விமலசுரேந்திர, லக்ஷபான மற்றும் நவலக்ஷபான ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமான அளவு குறைந்து வருகின்றது.
குறிப்பாக, காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மாத்திரம் தற்போது 34 அடி வரை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய நீர்த்தேக்கங்களிலும் இதேபோன்ற நீர்மட்டச் சரிவு அவதானிக்கப்பட்டுள்ளது.
வறட்சி காரணமாகப் பல பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. ஹட்டன் பகுதியில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாத்திரமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனால் அப்பகுதியிலுள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மேலதிகப் பணம் செலுத்தி, தனியார் மூலம் குடிநீரைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
மேலும், ஹட்டன் பிரதேசத்தின் ரூவன்புர, அலத்கம மற்றும் கொட்டகலை உள்ளிட்ட பல கிராமங்களிலும் மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைவதற்குப் பிரதான காரணமாக, வறட்சிக் காலத்தில் காடுகளுக்குச் சட்டவிரோதமாகத் தீ வைக்கப்படுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் பல நீரூற்றுகள் வறண்டு போயுள்ளதாக அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், அவற்றின் இயற்கை அழகு குன்றிப் போயுள்ளது. இக்காலநிலை இன்னும் சில வாரங்களுக்குத் தொடருமானால், மின் உற்பத்தி பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, குடிநீர் தட்டுப்பாடு மேலும் தீவிரமடையும் அபாயம் காணப்படுவதால், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
--
