Mar 16, 2026 - 01:09 PM -
0
நாட்டு மக்களுக்கு சீரான முறையில் எரிபொருளை பெற்றுக் கொடுக்க தற்போதைய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது போதும் எதிர்கட்சியினர் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றனர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (16) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வாரங்களில் வரிசையிலே அவ்வாறு இருக்கக்கூடிய ஒரு நிலைமை ஏற்படின், அந்த வரிசையிலே நின்று எரிபொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க இருக்கிறோம். குறிப்பாக அவர்களுக்குரிய மலசலகூட வசதிகள், அதேபோல் அவர்கள் வெயிலில் நிற்காத வகையிலே ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கின்றன.
இந்த எரிபொருள் தொடர்பாக, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக ஏதோ வேற்று கிரகத்திலிருந்து அல்லது வேறு உலகத்தில் இருந்து வந்தவர்கள் போல எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுகின்ற நிலைப்பாடு இருக்கிறது.
இவர்களுக்குப் புரியவில்லையா? உலகிலே ஒட்டுமொத்தமான நாடுகளுமே, முழு உலகமுமே இந்த எரிபொருள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றது. இலங்கை மட்டுமல்ல. இவர்கள் ஒரு சந்தர்ப்பவாதத்தை இங்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அவர்களுடைய இந்தச் சந்தர்ப்பவாதம் எடுபடப் போவதில்லை. மக்களுக்குத் தெரியும், மக்கள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள் இது ஒட்டுமொத்தமான உலகத்திற்கான ஒட்டுமொத்த பிரச்சனை. இவர்கள் தங்களுடைய ஒரு கீழ்த்தரமான, மலிவான அரசியலை மேற்கொள்வதற்காக இவ்வகையாக கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற சஜித் பிரேமதாச, குழந்தையை விட மிகவும் மோசமான நிலையிலே அவருடைய மனநிலை காணப்படுகின்றது. அவர் ஏதோ வேற்று கிரகவாசி போல் தன்னுடைய உரையில் பல்வேறுபட்ட விஷயங்களைக் கூறுகிறார்.
நாட்டிலே QR கோட்டை நடைமுறைப்படுத்தி விட்டதாக கூறுகிறார். அது நாங்கள் மக்களுடைய வசதிக்காக செய்திருக்கின்றோம். மக்களுடைய எரிபொருளைப் பெற்றுக் கொள்கின்ற அந்த நெருக்கடிகள் ஏற்படாமல் அதைக் குறைப்பதற்காக நாங்கள் ஏற்படுத்தி இருக்கின்றோம்.
இதைப் புரியாதவர் போல சிறுபிள்ளைத்தனமாக இவருடைய கூற்றுகள் இருக்கின்றன. இவர் உண்மையில் அரசியலுக்குப் பொருத்தம் இல்லாதவர் என்ற வகையிலே மக்கள் பேசிக் கொள்வதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
எம்மைப் பொறுத்தவரையிலே எங்களுடைய அரசாங்கம் மக்களுடைய அரசாங்கம் என்ற வகையிலே, தொடர்ச்சியாக மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை நீக்கக் கூடிய வகையிலான செயல்பாடுகளை நிச்சயமாக எங்களுடைய திட்டமிடல்கள் ஊடாக நாங்கள் மேற்கொள்வோம்.
மக்கள் பீதி அடையாமல் எரிபொருளைக் கொள்வனவு செய்து சேமித்து வைக்க வேண்டும் என்ற வகையிலே ஈடுபடாமல் இருப்பது நல்லது என்று நினைக்கின்றேன். அத்தோடு மக்கள் பொதுப் போக்குவரத்தை கூடுதலாகப் பயன்படுத்துவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
அதுமட்டுமல்லாமல் ஏனைய பொருட்கள் விலைவாசிகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. எனவே எது எவ்வாறு இருப்பினும் எங்களுடைய அரசாங்கம் தெளிவான நிலையில் இருக்கிறது. மக்களுக்கு எரிபொருள் விநியோகத்தை சரியான முறையில் வழங்க வேண்டும் என்று நிச்சயமாகப் பாதிக்கப்படாத வகையிலே எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ச்சியாக எமது அரசாங்கம் வழங்கும் என தெரிவித்தார்.
--
