Mar 18, 2026 - 11:07 AM -
0
தொல்பொருள் மதிப்புள்ள பொருட்களுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, கடந்த 15 ஆம் திகதி மாலை அம்பாறை மாவட்டம், தெஹியத்தகண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சல்பிட்டிகம - சந்துன்புர வீதியில் பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்திச் சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்போது, ஒரு முச்சக்கர வண்டியைச் சோதனையிட்ட பொலிஸ் குழுவினர், அதிலிருந்த தொல்பொருள் மதிப்புள்ள பொருட்களுடன் ஐந்து பேரைக் கைது செய்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஒரு புத்தர் சிலை, நீலக்கற்கள் என சந்தேகிக்கப்படும் 3 கற்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் பெண்கள் என்பதுடன், ஒரு சந்தேக நபர் பொலிஸாரின் கைது நடவடிக்கையின் போது தப்பியோடியுள்ளார்.
ஆண் சந்தேக நபர்கள் பிபில மற்றும் மினிப்பே பகுதிகளைச் சேர்ந்த 32 முதல் 62 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், பெண் சந்தேக நபர்கள் மஹியங்கனை மற்றும் ரிதீமாலியத்த பகுதிகளைச் சேர்ந்த 26, 53 மற்றும் 55 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் தெஹியத்தகண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
--
