Mar 18, 2026 - 03:23 PM -
0
ஐதராபாதில் கடந்த 15 ஆம் திகதி பவன் கல்யாண் நடித்த உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்தின் பிரீ-ரிலீஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இடம்பெற்ற ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியது. நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பேசிக்கொண்டிருந்த போது, பின்னால் நின்றிருந்த ஸ்ரீலீலா திடீரென பின்னால் திரும்பி, நடிகர் மகேஷை பார்த்தார். அதேசமயம் மகேஷ் ஸ்ரீலீலாவை பார்த்து சிரித்தார். ஆனால், அதற்கு ஸ்ரீலீலா எந்த கவனமும் செலுத்தவில்லை.
இந்த வீடியோவை வைத்து நெட்டிசன்கள் பல்வேறு விதமாக கருத்துகளை பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து நடிகர் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளிட்ட பதிவில்,
“நிகழ்ச்சிக்கு முன்பு ஸ்ரீலீலா அவரது மொபைல் போனை என்னிடம் கொடுத்து வைத்துக்கொள்ள சொன்னார். பின்னர் மேடையில் வைத்து அவர் என் கையில் இருந்த அவரது போன் ஸ்கிரீனை பார்த்தார். அதன் பிறகு, எனக்கு பின்னால் இருந்த பெரிய ஸ்கிரீனை கவனித்தார். அங்கே நடந்தது அதுதான். ஆனால் சிலர் இதை தங்களுக்கு விருப்பமான விதத்தில் பலவிதமாக பரப்பி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். உஸ்தாத் பகத் சிங் படம் நாளை (19) வெளியாக உள்ளது.
