Mar 18, 2026 - 04:27 PM -
0
தமிழகத்தில் உள்ள அரச பாடசாலைகளில் ஆண்டு விழாக்களில் நடிகர் விஜயின் திரைப்படப் பாடல்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவு கல்வி வட்டாரங்களில் பரவலான விவாதத்தை கிளப்பியுள்ளது. பாடசாலை விழாக்களில் சினிமா பாடல்களுக்கு மாணவர்கள் நடனம் ஆடுவது தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக விஜயின் பாடல்கள் மட்டுமே மாணவர்களின் முதல் தேர்வாக இருந்து வந்தன.
ஆனால் தற்போதைய சூழலில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். இந்நிலையில், சில மாணவர்கள் ஆண்டு விழா நடனங்களின்போது கட்சிக் கொடிகளையும், சின்னங்களையும் காட்சிப்படுத்துவது அதிகரித்துள்ளது. பாடசாலை வளாகத்தில் அரசியல் சாயம் படிவதை தடுக்கும் நோக்கத்தில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதேபோல் இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலும் கட்சி ஆதரவாளர்கள் கொடிகளுடன் திரள்வது சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்த தடை உருவானது என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட நபரை மட்டும் இலக்காக வைப்பதை விட அனைத்து சினிமா பாடல்களுக்கும் பாடசாலை வளாகத்தில் தடை விதிக்க வேண்டும் என பிரபல யூடியூப் சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் கருத்து தெரிவித்து உள்ளார். அவரின் கருத்துக்கும் ஏராளமானோர் லைக் செய்து வருகின்றனர்.
விஜய்யின் அரசியல் வருகைக்கு பின்னர் அவருக்கு எதிராக அரசு சார்பில் இதற்கு முன்னதாகவே ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது. அதிலும் குறிப்பாக விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட சமயத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக் கிண்ண போட்டிகள் நடைபெற்றது. அந்த சமயத்தில் பொலிஸார் மைதானத்திற்கு விசில் எடுத்துச் செல்ல அனுமதி மறுத்திருந்தனர். தற்போது பள்ளிகளில் விஜய் பாடசாலைகளில் நடனமாட தடைவிதித்து உள்ளனர். இன்னும் என்னென்ன தடையெல்லாம் வரப்போகிறது என்று தெரியவில்லை என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
