May 7, 2026 - 12:40 PM -
0
கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புத் தடிகளுடன் வர்த்தக நிலையமொன்றுக்குள் நுழைந்த ஆறு பெண்கள் உட்பட பத்து பேர் கொண்ட கொள்ளையர் கும்பல், ஊழியர்களைத் தாக்கி 13 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 4ஆம் திகதி மாலை 6.30 மணியளவில், அடையாளம் தெரியாத ஒரு ஆணும் பெண்ணும் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றைக் கொள்வனவு செய்யப் போவதாகக் கூறி குறித்த வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து, அதற்காக 45,000 ரூபா பணத்தை காசாளரிடம் வழங்கியதாக பொலிஸார் கூறினர்.
அவர்களுக்குத் தொலைக்காட்சிப் பெட்டியை வழங்குவதற்காக அதனைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, தாமதமாவதாகக் கூறி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் வழங்கிய பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு வெளியேறிய சிறிது நேரத்தில், அந்த ஆணும் பெண்ணும் மேலும் சில பெண்கள் மற்றும் ஆண்களுடன் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கியுள்ளனர்.
இதன்போது பையொன்றில் வைக்கப்பட்டிருந்த 1,309,000 ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொள்ளையர்கள் கால்நடையாகவே ரயில்வே வீதி வழியாகத் தப்பிச் சென்றுள்ளதாக மேலதிக விசாரணைகளில் வெளிவந்துள்ளது. கொள்ளையர்களின் இந்தச் செயல் அங்கிருந்த CCTV கேமராவிலும் பதிவாகியுள்ளது.
