Mar 19, 2026 - 10:45 AM -
0
நுவரெலியா - சீதா எலிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில், அதிவேகமாக வந்த கார் ஒன்றினால் ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்று நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.
நேற்று (18) மாலை 05:02 மணியளவில், சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையை முச்சக்கர வண்டி ஒன்று கடக்க முயன்றபோது, வலது திசையிலிருந்து மிக அதிக வேகத்துடன் வந்த கார் ஒன்று மோத முற்பட்டது. எனினும், முச்சக்கர வண்டி ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும் அதிர்ஷ்டவசத்தாலும் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி குமார யாப்பாவிடம் எமது செய்தியாளர் வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்,
"முச்சக்கர வண்டியில் இருந்த கேமரா பதிவில் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகனத்தின் இலக்கத் தகடு தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், சீதை அம்மன் ஆலயத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள ஏனைய பாதுகாப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். மிக விரைவில் சம்பந்தப்பட்ட வாகனமும் அதன் ஓட்டுநரும் அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்."
பொது இடங்களிலும் புனித தலங்களுக்கு அருகிலும் வாகனங்களைச் செலுத்துபவர்கள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் என பொலிஸார் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர் என தெரிவித்தார்.
--
