Mar 20, 2026 - 05:39 PM -
0
மன்னார் நகர சபையினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நகர சபையின் நிதியில் இருந்து முன்னெடுக்கப்பட உள்ளதோடு நகர சபையின் நிரந்தர சேமிப்புக் கணக்கில் இருந்து 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் வைத்தியசாலையில் ஒரு நவீன ரக வெளிநோயாளர் பிரிவு அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையில் இன்று (20) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் நகர சபையின் பத்தாவது கூட்டத்திலே நாங்கள் பல முக்கியமான தீர்மானங்கள் எடுத்திருக்கிறோம். மன்னார் வைத்தியசாலையின் இயக்குனர், வைத்தியசாலை அபிவிருத்தி குழு மற்றும் மன்னார் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, நாங்கள் மன்னார் வைத்தியசாலைக்கு மன்னார் நகர சபையின் நிரந்தர சேமிப்புக் கணக்கில் இருந்து 100 மில்லியன் (10 கோடி) ரூபாய் வழங்குவதென தீர் மானித்திருக்கிறோம்.
இந்த நிதியின் ஊடாக மன்னார் வைத்தியசாலையில் ஒரு நவீன ரகமான வெளிநோயாளர் பிரிவுக்கான (OPD) கட்டிடத்தை அமைப்பதே எமது நோக்கமாகும். ஒரு தனியார் வைத்தியசாலையில் எவ்வாறு வெளிநோயாளர் பிரிவு இருக்குமோ, அதே போன்ற வசதிகளுடன் கூடிய ஒரு கட்டிடத்தை அமைக்க உள்ளோம். அதில் ஒரு சிறிய அவசர அறுவை சிகிச்சை கூடம், இரத்த வங்கி, வெளி நோயாளர்கள் மருந்துகளைப் பெற்றுச் செல்வதற்கான இரண்டு கவுண்டர்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்தத் தீர்மானத்துக்கு சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் தமது ஆதரவை தெரிவித்தனர். இருப்பினும், தமிழரசுக் கட்சியை சேர்ந்த பார்த்திபன் மற்றும் பிரசாத் ஆகிய இரு உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர்.
வீதி போடுவதற்கும் கால்வாய் அமைப்பதற்கும் பணம் தேவைப்படும் நிலையில், ஏன் வைத்தியசாலைக்கு வழங்குகிறீர்கள் என்ற கருத்தை அவர்கள் முன்வைத்தனர்.
இருந்தபோதிலும், மன்னார் மக்களின் உயிரை நாங்கள் மிகவும் அக்கறையுடன் காக்க வேண்டும், அவர்களது சுகாதாரத்தை பேண வேண்டும் மற்றும் மருத்துவத் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக இந்த 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு ஆதரவு வழங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
--
