Mar 20, 2026 - 10:38 PM -
0
மார்ச் 03 முதல் மார்ச் 18 வரையிலான காலப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 53 பேரைத் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தியமை, வெடிபொருட்களைப் பயன்படுத்தியமை, மின்சார ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தமை போன்ற சட்டவிரோத மீன்பிடி முறைகளைக் கையாண்டமை, அனுமதிப்பத்திரமின்றி இரவு நேரங்களில் நீருக்குள் மூழ்கி மீன்பிடித்தமை மற்றும் விஞ்ச் (Winch) இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 53 சந்தேகநபர்களுடன் 13 டிங்கி படகுகள் மற்றும் 4 டிராக்டர்களையும் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.
வெடித்தலதீவு, சவுத்பார், வங்காலை ,புத்தளம், உடப்புவ, உடையூர்புதி, வாகரை கண்டலடி, களுவான்கேணி, பால்ச்சேனை, சவுக்கடி, யாழ்ப்பாணம் மண்டைதீவு, திருகோணமலை, கின்னியா, கொக்கிளாய் மற்றும் காலி அக்குரலைஆகிய கடற்கரை மற்றும் கடல் பரப்புகளை உள்ளடக்கியதாக இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட சந்தேகநபர்கள், வெடிபொருட்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலுப்புக்கடவை பொலிஸ் விசேட அதிரடிப்படை, மன்னார், புத்தளம், வாழைச்சேனை, மட்டக்களப்பு, மண்டைதீவு, நானாட்டான், கிண்ணியா மற்றும் முல்லைத்தீவு மீன்வள ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் காலி கடலோரக் காவல்படை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
