Mar 23, 2026 - 03:57 PM -
0
பேருந்துக் கட்டணத்தை உயர்த்துமாறு கோரி தனியார் பேருந்து ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, அம்பாறை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (23) பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் பேருந்து ஊழியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதால், கொழும்பு, கண்டி, அனுராதபுரம் மற்றும் கேகாலை உள்ளிட்ட நீண்டதூர சேவைகளும், உள்ளூர் குறுகிய தூர சேவைகளும் முற்றாக முடங்கியுள்ளன. இதனால், மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில், போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், அம்பாறையிலிருந்து மாத்தறை நோக்கி ஒரு தனியார் பேருந்து புறப்படத் தயாரானது. இதைக் கண்ட ஏனைய பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் பணிப்பகிஷ்கரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்காமல் பேருந்தை இயக்க முயன்றதாகக் கூறி, அந்தப் பேருந்தை வழிமறித்து கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்காமல் பேருந்தை இயக்க முற்பட்டதாக கூறி, மாத்தறை பேருந்தின் சாரதியை தாக்க முற்பட்டதால் அந்த இடத்தில் அமைதியற்ற சூழல் உருவானது.
பின்னர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் இந்திரஜித் குணவர்தன தலைமையிலான பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
தற்போது குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, நிலைமை சுமுகமாக்கப்பட்டுள்ளதுடன் மேலும் குறித்த பணிப் புறக்கணிப்பினை தனியார் பேருந்து தரப்பினர் முன்னெடுத்துள்ளனர்.
--
