Mar 23, 2026 - 05:04 PM -
0
பயணக் கட்டணத்தை அதிகரிக்கக் கோரி நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (23) கலவையான சூழல் காணப்பட்டது.
அம்பாறை நகரப் பகுதியில் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் வீதியோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். அங்கு பாதுகாப்பு நிமித்தம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை நகரத்தில் பதற்றம் நிலவிய போதிலும், கல்முனை பிராந்தியத்தில் சில இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் எவ்வித தடையுமின்றி சேவையில் ஈடுபட்டன. கல்முனை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறுகிய மற்றும் நீண்ட தூர சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் தனியார் பேருந்து சேவைகள் தடையின்றி இடம்பெற்று வருகின்றன. நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு சேவையைத் தொடர மட்டக்களப்பு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி தமக்கும் பெரும் சவாலாக உள்ள போதிலும், பொதுமக்களின் போக்குவரத்தைப் பாதிக்கச் செய்ய விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ள உரிமையாளர்கள், தமக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது மட்டக்களப்பிலிருந்து கொழும்பு போன்ற தூர இடங்களுக்கான சேவைகளும், உள்ளூர் சேவைகளும் சுமூகமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
--
