Mar 24, 2026 - 07:28 AM -
0
கொலம்பியாவின் தெற்குப் பகுதியில் 125 பேருடன் சென்ற கொலம்பிய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரு எல்லையோரத்திலுள்ள கொலம்பியாவின் தெற்கு அமேசான் பிராந்தியமான புவேர்ட்டோ லெகுய்சாமோ (Puerto Leguízamo) பகுதியிலிருந்து இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற லொக்ஹீட் மார்ட்டின் ஹெர்குலஸ் சி-130 (Lockheed Martin Hercules C-130) ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானத்தில் 11 விமானப்படை உறுப்பினர்களும் 114 இராணுவ வீரர்களும் பயணித்ததாக கொலம்பிய விமானப்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்த 48 பேர் மீட்கப்பட்டுள்ள போதிலும், உயிர் பிழைத்தவர்கள் அல்லது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த உத்தியோகபூர்வ விபரங்களை அவர் வெளியிடவில்லை.
இதேவேளை, குறைந்தது ஒரு மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 77 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், "43 பேரின் நிலை இன்னும் கண்டறியப்படவில்லை" என்றும் கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
எனினும், இதுவரை 34 உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக புட்டுமாயோ (Putumayo) மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
