Mar 24, 2026 - 04:04 PM -
0
நடிகை த்ரிஷாவுக்கு நாய்கள் என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பது நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. முதலில் ஜோரோ என்கிற நாயை தன் மகன் போன்று வளர்ந்து வந்தார். அந்த மகன் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி இறந்தான். என் மகன் இறந்துவிட்டான். இனி என் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என்று சொல்லி மனமுடைந்து போய்விட்டார் த்ரிஷா கிருஷ்ணன்.
ஜோராவை நினைத்து இன்ஸ்டாகிாரமில் சோகமாக போஸ்ட்டுகள் போட்டு வந்தார். இந்நிலையில் தான் 2.2.2025 ஆம் ஆண்டு இஸ்ஸியை தத்தெடுத்து மகளாகவே வளர்க்கிறார். த்ரிஷாவை போன்றே இஸ்ஸி கிருஷ்ணனும் இன்ஸ்டாகிராமில் பிரபலம். என்ன தான் மகள் வந்துவிட்டாலும் மகன் ஜோரோவை நினைத்து ஃபீல் செய்வதை த்ரிஷா இன்னும் விடவில்லை. இந்நிலையில் இஸ்ஸியை குளிக்க வைத்த பிறகு எடுத்த வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டார் த்ரிஷா கிருஷ்ணன்.
மகளை குளிக்கை வைப்பது கஷ்டம் போலயே என்று பலரும் கமெண்ட் செய்தார்கள். அதன் பிறகு த்ரிஷா வெளியிட்ட மற்றொரு வீடியோவை பார்த்ததும் ஒரு வேளை மீண்டும் ஜோரோ நினைவு வந்துவிட்டதோ என்றே அனைவருக்கும் தோன்றியது.
நாய்களை வளர்ப்பவர்கள் பற்றி ஒருவர் பேசிய வீடியோ தான் அது. அதில் அந்த நபர் கூறியதாவது, நாய்கள் வளர்ப்பவர்கள் ரொம்ப துரதிஷ்டசாலிகள். தங்களின் பெஸ்ட் ப்ரெண்ட்ஸை இழக்கும் லூப்பில் தங்களை வைத்துவிடுவார்கள். நாய்களை விட நாம் அதிகம் வாழ்வோம் என்று அவர்களுக்கு தெரியும். 12 ஆண்டுகளில் நாய் இறந்துவிடும் என்று தெரியும். அப்படி இறக்கும்போது மனமுடைந்து போவார்கள். அதன் பிறகு மீண்டும் ஹார்ட் பிரேக் ஏற்படும் என்பது நன்றாக தெரிந்தும் கூட இன்னொரு நாயை எடுத்து வந்து வளர்ப்பார்கள். நாய்கள் இறப்பதற்கு முன்பு சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதை காண்பிக்க அவர்கள் தங்கள் இதயம் சில முறை உடைந்து போகவிடுகிறார்கள் என்றார்.
அவர் சொன்னது மாதிரி தான் ஜோரோ இறந்தபோது மனமுடைந்து வீட்டோடு முடங்கினார் த்ரிஷா. இஸ்ஸி வந்த பிறகே அவர் மீண்டும் சந்தோஷமாக இருக்கிறார். இஸ்ஸியும் ஒரு நாள் தன்னை பிரிந்துவிடும் என்று தெரிந்தாலும் அதுவரை மகளுக்கு இந்த உலகில் சொர்க்கத்தை காட்ட முடிவு செய்துவிட்டார் த்ரிஷா. இஸ்ஸியின் பொம்மைகள், படுக்கை, பிராம் ஆகியவற்றை பார்க்கும் மக்களோ, இந்த செல்லத்துக்கு ராஜ வாழ்க்கை தான். இருந்தால் த்ரிஷாவின் செல்ல நாயாக இருக்கணும் என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு இஸ்ஸியை தங்கமாக பார்த்துக் கொள்கிறார் த்ரிஷா.
கெரியரை பொறுத்தவரை சூர்யாவுடன் சேர்ந்து த்ரிஷா நடித்திருக்கும் கருப்பு படம் மே மாதம் 14 ஆம் திகதி ரிலீஸாகவிருக்கிறது. மார்ச் மாதம் துவங்கியதில் இருந்தே சமூக வலைதளங்களில் த்ரிஷா பற்றியே பேச்சாக உள்ளது. அவர் தன் நண்பர் விஜய்யுடன் சேர்ந்து கல்பாத்தி சுரேஷ் மகனின் ரிசப்ஷனுக்கு செல்லவே அந்த வீடியோ வைரலானது. மேலும் குந்தவை வீட்டில் குந்த வைத்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்று பார்த்திபன் தெரிவிக்க அதை கண்டித்தார் த்ரிஷா.
அதற்கு த்ரிஷாவை மூன்றாவது மனுஷி என்று சொல்லி ஒரு வீடியோ வெளியிட்டார் பார்த்திபன். உங்களை பற்றி மோசமாக விமர்சிக்கும் மற்ற யாரையுமே கண்டிக்கவில்லையே என்றார். அதன் பிறகு உடல் தானம் செய்ததற்காக த்ரிஷாவை வாழ்த்தி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பார்த்திபன்.
