Mar 26, 2026 - 04:49 PM -
0
மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு ஆதரவாகச் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது என வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் கோரியும் இன்றையதினம் (26) கொக்கட்டிச்சோலையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் இளையதம்பி கிரேஸ்குமாரன் தலைமையில், மண்முனை தென்மேற்குப் பிரதேச முச்சக்கர வண்டி உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
கடந்த 20ம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் கிணற்றிலிருந்து பெண் ஒருவரும், இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மூவர் உட்பட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 23-ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இவர்களில், பிரதான சந்தேக நபர்கள் மூவரை 4 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கவும், ஏனைய இருவரை நாளை (27-ஆம் திகதி) வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
குறித்த வழக்கு நாளை மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் முன்னிலையாகக் கூடாது எனவும், அவர்களுக்கு உச்சக்கட்டத் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
--
