Mar 30, 2026 - 10:10 AM -
0
அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை நாங்கள் மக்கள் பிரதிநிதியாகப் பார்க்கவில்லை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம். இந்த ஊடக சந்திப்பு அந்த மனநோயாளிக்கானது அல்ல, யாழ் மக்களுக்கானது என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் உப தலைவருமான ஆர். ராஜாராம் தெரிவித்தார்.
மலையக மக்கள் தொடர்பாக அவதூறான காணொளி ஒன்றினை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் குறித்து, நேற்று (29) ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மலையக மக்கள் தொடர்பாக அவர் பலமுறை தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளார். யாழ்ப்பாணத்து மக்கள் படித்தவர்கள் என்றும் மலையகத்தில் படித்தவர்கள் இல்லை என்றும் அவர் கூறுகிறார். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து ஆசிரியர்கள் வந்து எமக்குக் கற்பித்தார்கள், அதற்கு நாம் இன்றும் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்.
ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல. மலையகச் சமூகம் இன்று எல்லாத் துறைகளிலும் முன்னேறியுள்ளது. சட்டத்துறை மற்றும் நீதித்துறையிலும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு நிகரான ஒரு சமூகமாக இன்று மலையகச் சமூகம் உயர்ந்துள்ளது.
யாழ்ப்பாண மக்கள் யுத்த காலத்தில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தபோது, அவர்களுக்காகக் குரல் கொடுத்தவர்கள் மலையக மக்கள்.
சொந்த இனத்தையே இன்னொரு இனம் தரம் தாழ்த்திப் பேசுவதை யாழ். மக்கள் ஆமோதிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. மலையகச் சமூகம் என்பது எவராலும் தாழ்த்தப்பட வேண்டிய சமூகம் அல்ல. எனவே, குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்குப் பொது இடங்களில் எப்படிப் பேச வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுங்கள். அவர் தனது தரக்குறைவான பேச்சுக்காக மலையக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்தார்.
--
