Mar 30, 2026 - 02:12 PM -
0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிடமிருந்து 1,000 பவுண்ட் யுரேனியத்தை வெளியேற்றும் நோக்கில் ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்த இதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த நடவடிக்கை "அமெரிக்கப் படைகளை ஈரானுக்குள் பல நாட்கள் அல்லது அதற்கும் மேலாக இருக்கச் செய்யும்" எனக் கூறப்படுகிறது.
இது குறித்து ட்ரம்ப் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இருப்பினும், "ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை தயாரிப்பதைத் தடுப்பது என்ற தனது முக்கிய இலக்கை அடைய இது உதவும் என்பதால், அவர் பொதுவாக இந்த யோசனைக்கு இணக்கமாகவே இருக்கிறார்" என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனிடம் பிபிசி (BBC) விளக்கம் கேட்டுள்ளது.
இப்பகுதிக்கு அனுப்பப்படும் படைகள், "இஸ்பஹான் (Isfahan) அணுமின் நிலையத்தில் உள்ள ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குறிவைத்து நடத்தப்படும் ஒரு பணியில் ஈடுபடுத்தப்படலாம்" அல்லது கார்க் தீவைக் (Kharg Island) கைப்பற்றவோ அல்லது ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) பாதுகாப்பவோ பயன்படுத்தப்படலாம் என்று 'தி நியூயோர்க் டைம்ஸ்' (The New York Times) செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்பஹானில் உள்ள ஒரு மலைக்கு அடியில் ஆழமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும், "ஏறக்குறைய அணுகுண்டு தயாரிக்கும் தரத்திலான அணுசக்தி பொருட்களைக் கைப்பற்றி அழிப்பதற்கான" ஒரு நடவடிக்கையை ட்ரம்ப் "தெளிவாகப் பரிசீலித்து வருகிறார்" என்று இந்த மாத தொடக்கத்தில் தி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த நடவடிக்கை மிகவும் சிக்கலானது மற்றும் அதிக ஆபத்து நிறைந்தது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
