Apr 1, 2026 - 10:02 AM -
0
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை அகழ்வு செய்யும் பணிகள் இரண்டாவது நாளாகவும் நேற்று (31) 109 சென்றி மீற்றர் தோண்டப்பட்டபோதும் எதுவித மனித எச்சங்களும் மீட்கப்படவில்லை.
நேற்று மாலை அகழ்வும் நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதிக்கு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் வருகைதந்து அகழ்வு பணிகளை பார்வையிட்டார்.
குறித்த மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 2014 ஆம் ஆண்டு குறித்த வழக்கு இடைநிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பின்னர் 2017 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில் இவ்வழக்கு விசாரணை மீள ஆரம்பிக்கப்பட்டு கடந்த 2025 ஆம் ஆண்டு குறித்த மனிதப் புதைகுழி தொடர்பான பிரதேசம் அகழ்விற்கான கட்டளை கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டு கடந்த மாரச் 09 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின் போது கடந்த 30 ஆம் திகதி குறித்த பகுதியை அகழ்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன் கீழ் குறித்த பகுதிகளில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் கடந்த 30 ஆம் திகதி எந்தவித மனித எச்சங்களும் மீட்கப்படாத நிலையில் இரண்டாம் நாளான நேற்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டு திரும்பிய 167 ஹஜ் யாத்திரிகர்கள் குருக்கள்மடம் பிரதேசத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடத்தி காணாமலாக்கப்பட்டவர்கள் இங்கு கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டு தொடரப்பட்ட வழக்கின்ற அடிப்படையில் குறித்த மனித புதைகுழி பகுதி அகழப்படுகின்றது.
குறித்த அகழ்வின் போது வழக்கின் சட்டத்தரணிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், களுவாஞ்சிக்குடி பொலிஸார், மட்டக்களப்பு பொலிஸ் குற்றத் தடயவியல் பிரிவு, அகழ்வாரய்ச்சித் திணைக்களம், காணாமல் போனோர் அலுவலகத்தினர், பாதுகாப்புப் பிரிவினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் குறித்த பிரதேசத்தில் வந்திருந்தனர்.
குறித்த ஆய்வுப் பணிகளுக்காக தடயவியல் மானுடவியல் விசேட நிபுனர்கள்களான சட்ட வைத்திய அதிகாரிகளான வைத்தியர் தரங்க டீ சில்வா, வைத்தியர் செ.பிரணவன், வைத்தியர் கே.ஏ.கிரியுல்ல தலைமையிலான 11 பேர் அடங்கிய குழுவினரும், இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக மண்முனை தென் எருவில்ப்பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் குறித்த பகுதியில் மேலும் சில பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அதற்கான செலவுகளை தனியார் வழங்குவதற்குமான கோரிக்கையொன்று நகர்த்தல் பத்திரம் ஊடாக நேற்று களுவாஞ்சிகுடி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
குரலற்றவர்கள் குரல் அமைப்பின் சட்டத்தரணி ஊடாக இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
--
