Apr 2, 2026 - 04:01 PM -
0
கிளிநொச்சி மாவட்டம், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள நான்காவது இலங்கை மின்னியந்திர இராணுவ முகாமிற்காக, பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை அளவீடு செய்வதற்கு இன்று திட்டமிடப்பட்டிருந்தது.
இராணுவத்தின் இந்த நில ஆக்கிரமிப்பு முயற்சியை எதிர்த்து, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் இன்று காலை 8.00 மணியளவில் இராணுவ முகாம் முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள், இராணுவத்திற்கும் ஆளும் தரப்பிற்கும் எதிராகப் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்த நில அளவீட்டுப் பணிகளால் நில உரிமையாளர்கள் தமது வாழ்வாதாரக் காணிகளை நிரந்தரமாக இழக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
பச்சிலைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கவும், மக்களின் தொடர் போராட்டத்தினாலும் குறித்த நில அளவீட்டுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், சந்திரகுமார், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர், கரைச்சி பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் காணியுரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
--
