Mar 27, 2026 - 07:44 PM -
0
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிடுவது மற்றும் அது தொடர்பான மேன்முறையீடுகள், ஆட்சேபனைகளை கோருவது குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள இரண்டாவது பயனாளர் பெயர்ப்பட்டியல் இன்று (27) முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள இந்தப் பெயர்ப்பட்டியல் தொடர்பாக ஏதேனும் மேன்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின், அவற்றை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்காக பின்வரும் முறைகளைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் முறைகள்:
(i) இணையவழி (Online) ஊடாக: https://eservices.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று நேரடியாக மேன்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவங்கள் மூலம்: www.wbb.gov.lk என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்தோ அல்லது அந்தந்த பிரதேச செயலகம்/கிராம உத்தியோகத்தரிடமிருந்து விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டோ, அதனைப் பூர்த்தி செய்து உரிய பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
தொழில்நுட்ப உதவியுடன் இணையவழியில் சமர்ப்பித்தல்: பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் பிரிவில் உள்ள அதிகாரிகளின் தொழில்நுட்ப உதவியுடன் இணையவழியில் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க முடியும்.
(ii) பிரதேசத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட தொடர்பாடல் நிலையங்கள் (Communication Centers) ஊடாகவும் இணையவழியில் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கலாம்.
விசேட அறிவித்தல்:
(i) ஒரு நபர் ஒரு மேன்முறையீட்டை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
(ii) தகுதியற்றவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு எதிராக பொதுமக்களால் ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும். அநாமதேயமாகவும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க இடமுண்டு.
(iii) அனைத்து மேன்முறையீடுகளும் ஆட்சேபனைகளும் 2026 ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
