Apr 2, 2026 - 05:22 PM -
0
நல்லதண்ணி, ஸ்ரீ பாத வீதியில் அமைந்துள்ள ரிக்கார்டன் வனக் காப்பகத்திற்கு சட்டவிரோதமான முறையில் தீ வைத்த சந்தேக நபர் ஒருவர், ஹட்டன் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நேற்று (01) கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இன்று (02) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, தான் செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு ரூ. 91,100 அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன், தீயினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையையும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேக நபர் வைத்த தீயினால் வனப்பகுதியின் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. ஹட்டன் வனத்துறை அதிகாரிகள், மாஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் நல்லதண்ணி பொலிஸார் இணைந்து கடும் போராட்டத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தற்போது மலையகத்தில் நிலவும் வறட்சியான காலநிலையால் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மனிதர்களின் இத்தகைய பொறுப்பற்ற நாசகாரச் செயல்களால் காடுகள் அழிவதைத் தடுக்க விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வனப் பாதுகாப்பு அலுவலகத்தின் வன அதிகாரி வி.ஜே. ருக்ஷன் தெரிவித்துள்ளார்.
--
