Apr 2, 2026 - 07:27 PM -
0
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் இன்று (2) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ் இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் தற்போதைய நிலை குறித்து இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.
அண்மைய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் இதுவரை எட்டப்பட்டுள்ள சாதகமான முடிவுகள் குறித்து ஜனாதிபதியுடன் பிரதிநிதிகள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இதன்போது பாராட்டியுள்ளனர்.
குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைதல், முறையான வருமான முகாமைத்துவம் மற்றும் வெளிநாட்டு கையிருப்புகளை வலுப்படுத்துவதன் மூலம், நாட்டின் பொருளாதாரம் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக மாறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையைத் தொடர்ந்து பேணுவதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றும் விதம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள வெளிப்புற சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் விலை மற்றும் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் தாக்கங்களையும் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த வெளிப்புற சவால்களுக்கு மத்தியிலும், எட்டப்பட்ட பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொண்டு, மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தைச் சீராக முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தமது நன்மதிப்பைத் தெரிவித்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பணிக் குழுத் தலைவர் இவான் பாபஜார்ஜியு உட்பட அதன் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
