Apr 2, 2026 - 10:06 PM -
0
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு எவ்வித நியாயமான அடிப்படையுமில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அது வெறும் அரசியல் நோக்கத்தில் அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்குவதற்காக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் இன்று (02) ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
பயிற்சி முடித்த 453 புதிய வைத்தியர்கள் அரசாங்க சேவையில் இணைவதைத் தடுத்து, அவர்களை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் பிணைக் கைதிகளாகப் பயன்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த வைத்தியர்கள் நியமனங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் சனிக்கிழமை (4) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.
இந்த கால எல்லை எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படமாட்டாது என அவர் வலியுறுத்தினார்.
வைத்தியர்கள் விண்ணப்பிப்பதைத் தடுக்கும் வகையில் யாராவது அச்சுறுத்தல் விடுத்தால், அது குறித்து உடனடியாக சுகாதார அமைச்சுக்குத் தெரியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஊடாக விசாரணைகள் நடத்தப்படும்.
குறித்த நேரத்திற்குள் விண்ணப்பிக்காத வைத்தியர்களின் வைத்தியசாலை சேவை மற்றும் சம்பளம் அன்றோடு நிறுத்தப்படும்.
அவர்கள் மீண்டும் அரச சேவையில் இணைய வேண்டுமானால், அடுத்த 1,300 பேர் கொண்ட குழுவுடனேயே இணைய முடியும்.
அப்போது அவர்கள் சிரேஷ்டத்துவத்தை இழந்து பட்டியலின் இறுதிக்கே தள்ளப்படுவார்கள் என அமைச்சர் எச்சரித்தார்.
453 புதிய வைத்தியர்களைப் பலிக்கடாக்களாக்கி, அவர்களைப் அச்சுறுத்தி, தவறான தகவல்களை வழங்கி அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் இந்தச் செயல் மனிதாபிமானமற்றது.
எவருக்கும் அஞ்சாமல் சுயாதீனமாக முடிவெடுத்து அரச சேவையில் இணையுங்கள் என அமைச்சர் இளம் வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
