Apr 4, 2026 - 07:07 PM -
0
இந்தோனேசியாவின் தொலைதூரத்திலுள்ள வடக்கு தலாட் தீவுகளில் இன்று (04) 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
எனினும், உயிர்ச்சேதங்களோ அல்லது சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பிலிப்பைன்ஸின் மிண்டானாவ் தீவிலுள்ள சரங்கானி மாகாணத்திற்கு தென்கிழக்கே சுமார் 90 கி.மீ தொலைவில், கடலுக்கு அடியில் 99 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கம் "மிகவும் லேசாகவே உணரப்பட்டது" என்றும், காயங்கள் அல்லது சேதங்கள் குறித்து எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்றும் மாகாண பேரிடர் அதிகாரி ஹாரி சௌரோ ஏஎஃப்பி (AFP) செய்திய நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் அதன் அண்டை நாடுகள் பசிபிக் "நெருப்பு வளையத்தில்" (Ring of Fire) அமைந்துள்ளதால், அங்கு நிலநடுக்கங்கள் தினசரி நிகழும் ஒன்றாகவே உள்ளன.
ஜப்பான் முதல் தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை வரை நீளும் இந்த வளையம், தீவிர நில அதிர்வு செயற்பாடுகளைக் கொண்ட ஒரு பகுதியாகும். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.
