Apr 4, 2026 - 08:03 PM -
0
தேசிய மின் உற்பத்திக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்குக் கீழே அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், இன்று (04) மாலை பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
அணைக்கட்டுக்குக் கீழே அமைந்துள்ள சுற்றுலா விடுதிக்கு அருகிலுள்ள பகுதிக்கு, இனந்தெரியாத நபர்கள் எவரேனும் தீ வைத்திருக்கலாம் என நீர்த்தேக்க மீனவர்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், நீர்த்தேக்கத்தின் உட்பகுதிகளுக்கு இலகுவாகச் செல்ல முடிகிறது. இவ்வாறான நிலையில், அப்பகுதியைப் பார்வையிடச் சென்ற எவரேனும் இத்தீயை வைத்திருக்கலாம் என மீனவர்கள் கூறுகின்றனர்.
அணைக்கட்டுப் பகுதியைச் சூழவுள்ள வனப்பகுதியில் ஏராளமான பறவைகள் கூடு கட்டியுள்ள நிலையில், வேகமாகப் பரவி வரும் இத்தீயினால் அவற்றின் வாழ்விடங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனினும், பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்த இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என பிரதேச மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
--
