Apr 7, 2026 - 06:01 PM -
0
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரச நிதி பற்றிய குழுவில், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (திருத்தச்) சட்டமூலம் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 02ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தில் இந்தத் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 2026 ஜூலை 01 முதல் வரியில் பதிவு செய்வதற்கான வருடாந்த வருவாய் வரம்பு 60 மில்லியன் ரூபாவிலிருந்து 36 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
2026 மே 01 முதல் வாகன இறக்குமதி அல்லது உற்பத்தியின் பின்னரான விற்பனையின் போது சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி வசூலிக்கப்படவுள்ளது. எனினும், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் இந்த வரியிலிருந்து விடுவிக்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி ஆகியவற்றைத் திருத்தி, ஒரு ஒற்றை வரி முறையாகப் பேண வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தற்போதுள்ள வரி வருவாயைத் தக்கவைத்துக்கொண்டு எதிர்காலத்தில் வரி கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
மேலதிகமாக, 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ், ஏற்றுமதியாளர்கள் உள்நாட்டு டொலர் பிணைமுடிகளில் முதலீடு செய்வதற்கான புதிய விதிகளுக்கும் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, முன்னைய விதிகளின் கீழ் இலங்கை அபிவிருத்தி பிணைமுடிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த முதலீட்டு வாய்ப்பு நீக்கப்பட்டு, புதிய திருத்தங்கள் மூலம் ஏற்றுமதியாளர்கள் தமது வருமானத்தில் 10% வரை அரசாங்கத்தினால் வெளியிடப்படும் வெளிநாட்டு செலாவணி ரீதியான கடன் பிணைமுடிகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
