Apr 7, 2026 - 06:18 PM -
0
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, நாளைய தினம் முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை ரயில்வே திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என்பன இணைந்து இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
இதற்கு இணையாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்படும் மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து சேவைகளின் ஊடாக நாளாந்தம் மேலதிகமாக 800 பயணத் தடங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், இலங்கை ரயில்வே திணைக்களம் தற்போது சேவையில் ஈடுபடுத்தியுள்ள ரயில்களுக்கு மேலதிகமாக, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து விசேட ரயில்களையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் தமது ஊர்களுக்குச் செல்வதற்காக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களில் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்களுக்கு சுமார் 15 இலட்சம் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பயணிகளுக்குத் தேவையான சுகாதார வசதிகள், பாதுகாப்பு, முதலுதவி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பேருந்து முனையங்களில் வழங்கப்பட்டுள்ளதுடன், விசேட பணிகளுக்காக அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இக்காலப்பகுதியில் பயணிகளிடம் அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலதிகமாக அறவிடுதல், சேவையின் தரம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு போன்ற விடயங்களைக் கண்காணிப்பதற்காக பிரதான நுழைவாயில்களை உள்ளடக்கிய வகையில் 24 மணிநேரமும் இயங்கும் நடமாடும் பரிசோதனை அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், 24 மணிநேரமும் இயங்கக்கூடிய வகையில் செயல்பாட்டு அறை மற்றும் நுகர்வோர் சேவைப் பிரிவொன்றை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நிறுவியுள்ளது. பொதுமக்கள் இது தொடர்பான முறைப்பாடுகள் அல்லது தகவல்களை 1955 என்ற உடனடித் தொலைபேசி இலக்கம் மற்றும் 071 259 55 55 என்ற வட்ஸ்எப் இலக்கம் ஊடாகத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


