Apr 7, 2026 - 07:09 PM -
0
லக்விஜய மின்நிலையத்திற்காக இலங்கை நிலக்கரி நிறுவனத்தினால் நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்ட செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான நிலக்கரி கொள்முதல் தொடர்பான விசேட தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கைக்கு நிலக்கரி விநியோகிப்பதில் சர்ச்சைக்குரிய 'ட்ரைடென்ட்' நிறுவனத்தினால் ஏற்றுமதி துறைமுகத்தில் அறிக்கைகளைப் பெற்றுக்கொண்ட ஆய்வகத்தின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்ட ஒன்று என கணக்காய்வாளர் நாயகம் இந்த விசேட தணிக்கை அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.
பாராளுமன்ற பொது நிறுவனங்கள் பற்றிய குழு அண்மையில் தேசிய தணிக்கை அலுவலகத்திற்கு விடுத்த அறிவித்தலுக்கு இணங்க கணக்காய்வாளர் நாயகம் இந்த அறிக்கையை வழங்கியுள்ளார். ஏலங்கள் கோரப்படுவதற்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்ட திகதியில், ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட ட்ரைடென்ட் நிறுவனம் தனது பதிவைக்கூட பூர்த்தி செய்திருக்கவில்லை என்பது இந்த அறிக்கையின் மூலம் மேலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
2025/2026 பருவத்திற்காக நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கு நிலக்கரி கொள்வனவு செய்யும் போது, அந்த கொள்முதல் நடைமுறை மற்றும் கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரி எதிர்பார்க்கப்பட்ட தரத்தில் இல்லாமை குறித்து கணக்காய்வாளர் நாயகத்திடம் பொது நிறுவனங்கள் பற்றிய குழு அறிக்கை ஒன்றைக் கோரியிருந்தது.
அதற்கமைய, லக்விஜய மின்நிலையத்திற்காக இலங்கை நிலக்கரி நிறுவனத்தினால் நிலக்கரி கொள்வனவு செய்யப்படும் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான நிலக்கரி கொள்முதல் தொடர்பான விசேட தணிக்கை அறிக்கை தற்போது தேசிய தணிக்கை அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கொள்முதல் நடைமுறையில், ஏலங்கள் கோரப்படுவதற்கான விளம்பரம் வெளியிடப்பட்ட திகதியில் பதிவை பூர்த்தி செய்த விநியோகஸ்தர்களிடமிருந்தே ஏலங்கள் கோரப்படும் என அந்த விளம்பரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்தத் திகதி வரை முழுமையான பதிவுக்கட்டணத்தைச் செலுத்தி பதிவை உறுதிப்படுத்தாத மூன்று விநியோகஸ்தர்களுக்கும் ஏலங்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், இந்த கொள்முதலுக்குத் தெரிவு செய்யப்பட்ட ட்ரைடென்ட் நிறுவனமும் அன்று வரை பதிவை உறுதிப்படுத்தியிருக்கவில்லை என கணக்காய்வாளர் நாயகம் அவதானித்துள்ளார்.
கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரி லக்விஜய மின்நிலையத்திற்குப் பொருத்தமான தரத்தைக் கொண்டுள்ளதா என்பது குறித்து ஏற்றுமதி துறைமுகத்திலும் இறக்குமதி துறைமுகத்திலும் சுயாதீன ஆய்வாளர் ஒருவரால் பரிசோதிக்கப்படும். இதன்போது ஏற்றுமதி துறைமுகத்தில் விற்பனையாளரால் நியமிக்கப்பட்ட 'Mitra SK South Africa' எனும் தாய் நிறுவனத்திற்கு தேவையான தரங்களுக்கு உட்பட்டு நிலக்கரி மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கான அங்கீகாரம் இருக்கவில்லை. இதன் காரணமாக, அந்தப் பரிசோதனை அறிக்கையை வெளியிடும் பணி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதியளவில் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்ட 'PT Mitra SK Analisa Testama Samarinda' எனும் இந்தோனேசிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் 2026 மார்ச் 31 ஆம் திகதி வரை புதுப்பிக்கப்பட்டிருந்தமை குறித்து தணிக்கையின் போது தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும், கிடைக்கப்பெற்ற 12 கப்பல் தொகுதிகளுக்கும் உரிய ஏற்றுமதி துறைமுக அறிக்கைகள், அங்கீகாரம் இல்லை என அடையாளம் காணப்பட்ட 'Mitra SK South Africa' தாய் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, ஏற்றுமதி துறைமுகத்தின் பரிசோதனை அறிக்கைகளுக்கும் லக்விஜய மின்நிலையத்தின் பிரதான கட்டுப்பாட்டுப் பிரிவிலிருந்து பெறப்பட்ட தரவுகளுக்கும் இடையே முரண்பாடுகள் காணப்பட்ட போதிலும், ஏற்றுமதி துறைமுக அறிக்கைகள் குறித்து உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்ள இலங்கை நிலக்கரி நிறுவனத்திற்குப் பல மாற்று வழிகள் இருந்தும் அவற்றில் எதனையும் பயன்படுத்த அந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
அதேபோல், ஆண்டு முழுவதும் இலங்கையில் நிலக்கரியை இறக்க முடியாது என்பதால், நிலக்கரியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய காலப்பகுதியில் அதனை அதிகபட்சமாகச் செய்ய வேண்டும். எனினும், அதற்கான வாய்ப்பு இருந்த 2025 நவம்பர் 13 முதல் டிசம்பர் 30 வரையான 40 நாட்களில் எவ்வித நிலக்கரி கப்பல்களையும் நாட்டுக்குக் கொண்டுவரக்கூடிய வகையில் கொள்முதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை நிலக்கரி நிறுவனம் தவறியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
பின்னர், நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் குறைவாகக் கப்பல்கள் வந்தமையால், இந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி அவசர கொள்முதல் மூலம் நிலக்கரி கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட 'Taranjot Resource' தனியார் நிறுவனமும், தனது பதிவைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னரான 36 மாத காலப்பகுதியில், லக்விஜய மின்நிலையத்தின் மொத்த வெப்ப உற்பத்தி பெறுமதியின் நிராகரிக்கப்பட்ட மட்டமான 5,900 kcal/kg அல்லது அதற்கு மேல் வழங்கத் தவறிய ஒரு நிறுவனம் என்பதும் கணக்காய்வாளர் நாயகத்தினால் இந்த அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலமைகளைக் கருத்திற் கொள்ளும் போது, உரிய காலத்திற்கு நிலக்கரி கப்பல்களைக் கொண்டுவர முடியாமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கட்டுப்பாடற்ற நிலைமைகளின் போது லக்விஜய மின்நிலையத்தின் தேவைக்கு நிலக்கரி போதுமானதாக இல்லாவிட்டால், அது தடையில்லா மின்சார விநியோகத்தைப் பாதகமாகப் பாதிக்கக்கூடும் என கணக்காய்வாளர் நாயகம் இந்த விசேட தணிக்கை அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த தணிக்கை அறிக்கை பின்வருமாறு:
