Apr 7, 2026 - 08:25 PM -
0
பாராளுமன்றத்தை நாளையதினம் (08) கூட்டுவதற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (07) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சகல புதன்கிழமைகளிலும் அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டமையால் நாளையதினம் (08) பாராளுமன்றத்தை கூட்டாமல் இருப்பதற்கு இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதற்கு அமைய நாளையதினம் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் தற்பொழுது நிலவும் நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், எதிர்வரும் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் பாராளுமன்ற அலுவல்களில் எவ்வித மாற்றமும் இல்லை.
அத்துடன், சிங்கள – புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்கான பாராளுமன்ற அமர்வுகளை நடத்தாதிருப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
