Apr 9, 2026 - 11:58 AM -
0
விளையாட்டுப் பொருட்களுக்குள் மறைத்து, கொரியர் சேவை ஊடாகக் கடத்தி வரப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருள் கல்முனையில் மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நேற்று (08) மாலை இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் (D.C.D.B) பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ். ரத்நாயக்கவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது, காரைதீவு பிரதேச சபையின் தோடம்பழம் சுயேட்சைக் குழுவின் முன்னாள் உறுப்பினரான 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர் கொரியர் மூலம் பெற்றிருந்த விளையாட்டுப் பொருட்களில் இருந்த கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 107 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபரிடமிருந்து ஐஸ் போதைப்பொருளுடன், ஒரு மின்னணு தராசு (Electronic Scale), இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காகக் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தர மற்றும் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல ஆகியோரின் ஆலோசனையின் கீழ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டாரவின் வழிநடத்தலில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (09) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--
