Apr 12, 2026 - 06:58 PM -
0
ஹோர்முஸ் நீரிணைப்பு வழியாக நுழைய முயலும் அல்லது வெளியேற முயலும் அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிட போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நீண்ட பதிவொன்றில், சந்திப்பு நன்றாக நடந்தது, பெரும்பாலான விடயங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன. ஆனால் உண்மையில் முக்கியமான ஒரே ஒரு விடயமான அணுசக்தி குறித்து உடன்பாடு எட்டப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடையற்ற போக்குவரத்து குறித்த ஒப்பந்தம் ஏதோ ஒரு கட்டத்தில் எட்டப்படும் என்று கூறிய அவர், ஈரானைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத வகையில், அங்கே எங்காவது ஒரு கண்ணிவெடி இருக்கலாம் என்று கூறுவதன் மூலம் ஈரான் அதற்கு இடமளிக்கவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
அதே பதிவில் ட்ரம்ப் மேலும் கூறுகையில், ஈரானுக்குக் கட்டணம் செலுத்திய சர்வதேச கடற்பரப்பில் உள்ள ஒவ்வொரு கப்பலையும் தேடித் தடுத்து நிறுத்துமாறு தமது கடற்படைக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானியர்கள் வைத்துள்ள கண்ணிவெடிகளை அமெரிக்க கடற்படை அழிக்கத் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் கட்டணம் செலுத்தும் எவருக்கும் சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பான பயணம் இருக்காது என்று கூறிய அவர், எங்கள் மீதோ அல்லது அமைதியான கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தும் எந்தவொரு ஈரானியரும் மிகக் கொடூரமாக அழிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த முற்றுகை விரைவில் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
