Apr 12, 2026 - 10:32 PM -
0
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சர்வதேச சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தால், அமெரிக்காவுடனான உடன்பாடு எட்ட முடியாத ஒன்று அல்லவென ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்க - ஈரானிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஈரான் ஜனாதிபதி பெசெஷ்கியானுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த உரையாடல் தொடர்பான அறிக்கையை ஈரான் அரச ஊடகம் பகிர்ந்துள்ளது.
அந்த உரையாடலின் போதே. ஈரான் ஜனாதிபதி இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஈரானிய ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் மோதலுக்கு அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியான தீர்வைத் தேடுவதற்கும், நியாயமான மற்றும் நீடித்த அமைதியை அடைவதற்கான முயற்சிகளுக்கு மத்தியஸ்தம் செய்வதற்கும் தமது தயார்நிலையை விளாடிமிர் புடின் வலியுறுத்தியதாக இரு நாட்டு தலைவர்களின் தொலைபேசி உரையாடல் குறித்து கிரெம்ளின் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
