Apr 13, 2026 - 10:27 PM -
0
பராபவ என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, நாளை (14) மலரவுள்ளது.
சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரையின் முதலாம் நாள் வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சித்திரை புத்தாண்டானது வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, நாளை காலை 8 மணி 40 நிமிடத்துக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, நாளை காலை 9 மணி 32 நிமிடத்துக்கும் பராபவ வருடம் பிறக்கிறது.
புத்தாண்டு அன்று அதிகாலையில் விழித்ததும் முதலில் மங்களகரமான பொருட்களைப் பார்ப்பது வழக்கம். தங்கம், வெள்ளி, பணம், முக்கனிகள் (மா, பலா, வாழை), பூக்கள் மற்றும் கண்ணாடி அடங்கிய தட்டை முதல் நாள் இரவே தயார் செய்து வைத்து, மறுநாள் காலையில் அதைப் பார்ப்பார்கள்.
இது அந்த ஆண்டு முழுவதும் செழிப்பைத் தரும் என்பது நம்பிக்கையாகும்.
பின்னர் மருத்து நீர் வைத்து நீராடுவது வழக்கமாகும்.
மருத்து நீர் வைப்பதற்கான விஷூ புண்ணிய காலம் வாக்கிய பஞ்ஞாங்கத்தின் படி நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.40 மணிமுதல் மதியம் 12.40 மணிவரையில் கிழக்கு திசை நோக்கி பார்த்து வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கணித பஞ்ஞாங்கத்தின் படி மருத்து நீர் வைப்பதற்கான விஷூ புண்ணிய காலம் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.32 மணிமுதல் பகல் 1.32 மணி வரை சந்தர்ப்பம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு நிற பட்டாடை அல்லது சிவப்பு நிற கரை வைத்த வௌ்ளை நிற பட்டாடை மற்றும் பவளம் அணிவதும் சிறப்பாகும்.
சங்கிரமதோஷ நட்சத்திரங்கள் - திருவாதிரை, புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம், சுவாதி, அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள் ஆகும்.
