Apr 16, 2026 - 03:31 PM -
0
பொதுவாகவே நம்முடைய நாட்டில் ஒரு குழந்தை இந்த மாதத்தில் பிறந்தால், இந்த குணத்தோடு இருக்கும், அவர்களின் எதிர்காலம் இந்த மாதிரி அமையும் என்பதை கணக்கிட ஒரு வரைமுறை இருக்கிறது. இவற்றில் எல்லாரும் பயப்படும் ஒரு மாதம் என்றால் அது சித்திரை மாதம் தான். ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, சித்திரையில் குழந்தை பிறக்கக்கூடாது என்பதில் நிறைய பேர் உறுதியோடு இருக்கிறார்கள். இதில் குறிப்பாக சித்திரை மாதத்தில் ஆண் குழந்தை பெற்றால் பெற்றவர்கள் தெருவில் நிற்பார்கள் என்கிற பழமொழியே இருப்பதாக சொல்வார்கள்.
இதன் காரணமாகவே நிறைய பேர் பயந்துகொண்டு, சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்துவிட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்வது என்று பார்ப்பார்கள். இதனை கருத்தில் கொண்டு தான் நம் முன்னோர்கள், அந்த காலத்தில் தம்பதியினரை ஆடி மாதத்தில் தம்பதியினரை பிரித்து வைப்பார்கள்.
சித்திரையில் குழந்தை பிறந்துவிடக் கூடாது என்பதற்காக தான் ஆடி மாதத்தில் தம்பதியினரை சேர விடாமல் வைத்திருந்தார்களாம். சித்திரையில் குழந்தை பிறப்பதனால் ஏதேனும் ஆபத்து உண்டா? என்பது பற்றி பிரபல சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி யூடியூப் வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார். அதைப் பற்றி பார்க்கலாம்.
இராமாயணத்தில் இருந்து தான் பெரியவர்கள் இந்த காரணத்தை எடுத்திருக்கலாம் என கூறுகிறார் தேச மங்கையர்கரசி. ஏனெனில், இராமாயணத்தில் ராமன் அவதரித்தது சித்திரை மாதம், அவர் கானகம் சென்றபோது, அவரின் தந்தையான தசரத சக்கரவர்த்தி, மகனை பிரிந்த துயரம் தாங்காமல் தன் உயிரை விட்டுவிட்டார் என்பது இராமாயணம் படித்த எல்லோருக்குமே தெரிந்த கதை தான். அதனால் தான் சித்திரையில் பையன் பிறந்தால் தகப்பன் தெருவுக்கு வரக்கூடிய நிலை வரும் என சொன்னார்கள். ஆழ்ந்து இராமாயணம் படித்தவர்களுக்கு தெரியும் இது உண்மையான வரலாறு அல்ல. இராமாயணத்திலேயே இதற்கான பதில் சொல்லப்பட்டு உள்ளது.
ராமர் கானகம் சென்றபோது தசரதன் புத்திர சோகத்தால் தான் இறந்தார் என்று ராமரும் நம்பிக் கொண்டு தான் இருந்தாராம். இதை ரமருக்கே உணர்த்தியது வாலி தானாம். வாய்மையும், மரபையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் தசரதன் மாண்டுபோனாராம்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பது வாய்மை. மூத்தவனுக்கு தான் பட்டம் கட்ட வேண்டும் என்பது மரபு, வாய்மையை காப்பாற்றினால் மரபு கெட்டுப்போகும், மரபை காப்பாற்றினால் வாய்மை கெட்டுப்போகும். இரண்டில் எதை காப்பாற்ற வேண்டும் என்பது தெரியாமல் குழப்பத்தில் இருந்த தசரதன், அதற்கு பதிலாக தனது உயிரையே துறந்துவிட்டாராம்.
சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்ககூடாது என சொல்வதற்கு உண்மையான காரணம் என்னவென்றால், சித்திரை மாதம் என்பது அதிகமான உஷ்ணம் நிறைந்த காலம். இந்த உஷ்ண காலத்தில் பிரசவிப்பது ரொம்ப கொடுமையான ஒரு விஷயம். அக்னி நட்சத்திரமாக அமைந்துவிட்டால், அது பிரசவிக்கின்ற பெண்ணுக்கும், பிறக்கும் குழந்தைக்கும், அதீதமான உஷ்ண தன்மைகள் உடம்பில் இருக்கும்.
இந்த காலத்தை போல் அந்த காலத்தில் ஏசி வசதிகள் கிடையாது. வெயில் காலங்களில் பிரசவத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்காக நம்முடைய முன்னோர்கள், சித்திரையில் குழந்தை பிறந்தால் பிரச்சனை வரும் என சொல்லி இருக்கிறார்கள் என தேச மங்கையர்கரசி கூறி இருக்கிறார்.
